திருநங்கை போல் வேடமிட்டு போராட்டம்... சித்தூர் எம்.பி. மீது ‘தமன்னா’ போலீசில் புகார்
திருநங்கைகளை அவமதித்ததாக சித்தூர் எம்.பி. மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் எம்.பி. சிவபிரசாத் மீது திருநங்கைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிவபிரசாத். தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.யான இவர், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ஹிட்லர், கிறிஸ்துமஸ் தாத்தா, அம்பேத்கர், பெண் வேடம், ஆஞ்சநேயர், பள்ளி மாணவர், சலவைத் தொழிலாளி, பாஞ்சாலி, முஸ்லிம் வேடம், ஸ்வச்பாரத் சேவகர் என பல்வேறு வேடங்களில் ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு வந்து, ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் இரு தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திருநங்கை போல் வேடமிட்டு போராட்டம் நடத்தினார். இவரது இந்த செயலுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விஜயவாடா திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவி தமன்னா சிம்மாத்திரி, சித்தூர் எம்.பி. சிவபிரசாத் மீது கவர்னர்பேட்டை காவல் நிலையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திருநங்கைகள் மனம் புண்படும்படி சிவபிரசாத் நடந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட எம்.பி. சிவபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமன்னா கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications