தாம்பரம்: திமுகவின் முக்கிய புள்ளி ஆக்கிரமித்த 100 கோடி ரூபாய் நிலம் மீட்பு
தாம்பரம்: தாம்பரத்தில் திமுக முக்கிய புள்ளி ஒருவர் ஆக்கிரமித்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசாங்க நிலம் மீட்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சித்தலாப்பாக்கம் சந்திப்பில் அரசாங்கத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளது.இதனை கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்துள்ளார்.
இதைப்பற்றிய புகார்களைப் பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அந்நிலம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றும், தவறாக ஆக்கிரமிப்பு செய்யப்படிருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து ஆட்சியர் கடைகளை இடிக்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்த வணிகர் சங்கத்தலைவருக்கு ஆதாரத்துடன் உண்மை விளக்கப்பட்டதால் அவரும் போராட்டத்தைக் கைவிட்டார்.
இதன்பிறகு, இன்று காலை அங்கு அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்த 86 கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு பரங்கிமலை காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேருக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
திமுகவின் முக்கிய பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இவ்விடத்தின் மதிப்பு ரூபாய் 100 கோடிக்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.