நாய், கோழிகளும் உசுருதானேய்யா.... வெள்ளத்திலும் மனிதநேயம் காத்த சென்னை மக்கள்
சென்னை: கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையிலும், சென்னை புறநகரில் வசிப்பவர்கள் தங்களின் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளின் உயிரைக்காக்க ஏராளமானோர் போரடியதை கண்கூடாக காண முடிந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையால் வடமாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கொட்டிய கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து தண்ணீர் தேசங்களாக மாறியுள்ளன.
ஏரிகள் நிரம்பி உடைந்து வெள்ளநீர் வெளியேறி வருவதால் தென்சென்னை பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் தரைத்தளம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சிலரது வீடுகளிலோ முதல்தளம் வரைக்கும் தண்ணீர் எட்டிப்பார்க்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலமும் , ஹெலிகாப்டர் மூலமும் மீட்டு வருகின்றனர்.

தாம்பரத்தில் மீட்பு
சென்னை தாம்பரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியிருந்த 600 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் கூறினர்.

செல்லப்பிராணிகள்
வெள்ளத்தில் உடமைகளை இழந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவித்து வரும் நிலையிலும் செல்லப்பிராணிகளையும் உடன் வைத்துக்கொண்டு மீட்க யாராவது வருவார்களா என்று காத்திருந்தவர்களுக்கு கடவுளாய் வந்து மீட்டனர் மீட்புப்பணியினர்.

எல்லாமே உசுருதானேய்யா
ஆசை ஆசையாய் வளர்த்த நாய்களும், கோழிகளும் வெள்ளத்தில் தப்பிப் பிழைத்து தங்களுடனேயே இருக்க... படகுகளில் அவைகளை இறக்கிவிட்டு பின்னர் தாங்கள் இறங்கினர்.
குறுகலான பகுதியில் உள்ளவர்களை பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டு வரும் நிலையில், செல்லப்பிராணிகளையும் போரடி சிலர் மீட்டனர். முடிச்சூர், பாரதி நகர் பகுதி சாலையோரங்களில் புதர் மண்டி இருப்பதால், மீட்புப் படையினர் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

நெகிழ்ச்சியான செயல்
முடிச்சூர் பகுதிகளில் 25 வீரர்கள் கொண்ட குழுக்களாக பிரிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கினாலும், உடமைகளை பறிகொடுத்தாலும், உணவு இன்றி தவித்த நிலையிலும் ஏராளமானோர் மனிதாபிமானத்துடன் தாங்கள் வளர்த்த செல்லப்பிராணிகளையும் வெள்ளத்தில் பத்திரமாக மீட்டது காண்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.












Click it and Unblock the Notifications