தாம்பரத்தில் 50 செ.மீ மழை- வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள்
சென்னை: கடந்த 24 மணிநேரத்தில் தாம்பரத்தில் அதிக பட்சமாக 50 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கத்தில 45.7 செ.மீ. மீனம்பாக்கத்தில் 39 செ.மீ. அளவிற்கு மழை அளவு பதிவாகியுள்ளது. இதன்மூலம் பிபிசி வானிலை ஆய்வுமையத்தின் கணிப்பு பலித்துள்ளது.
ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் திங்கட்கிழமை தொடங்கிய மழை புதன்கிழமை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. இதில் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளான முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பாநகர், பாரதிபுரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளி்ல் 20 அடிக்கு மேலே தண்ணீர் வந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

முதல்மாடிவரை வெள்ளம்
மழை வெள்ளம் முதல் மாடி வரை தண்ணீர் உயர்ந்துள்ளதால், இரண்டாம் மாடி என மூன்றாம் மாடியில் தங்கியிருக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். புறநகர் பகுதிகளில் மட்டும் 300 ராணுவ வீரர்கள் இந்தமீட்பு பணியி்ல் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று 50 மீன்பிடி படகுகளில் மீனவர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போன்ற 1000க்கும் மேற்பட்ட மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

50 செ.மீ மழை பொழிவு
கடந்த 24 மணிநேரத்தில் தாம்பரத்தில் அதிக பட்சமாக 50 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியேற முடியாமல் தவிப்பு
தாம்பரம் மேற்கு சி.ஐ.டி. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஸ்ரீமதி என்பவர் தனது குடும்பத்தினருடன் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவர் குடும்பத்தினருடன் வெளியேற நண்பர்கள் உதவியை செல்போன் மூலம் நாடினர்.
ஆனால் செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால் யாராலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள உறவினருக்கு ஸ்ரீமதி தகவல் கொடுத்தார். அந்த உறவினர் சென்னையில் உள்ள ஒருவருக்கு தகவல் கொடுத்தார். இவர் கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஸ்ரீமதி குடும்பத்தினரை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

படகுப் போக்குவரத்து
நாலாபுறம் மழை தண்ணீர் ஓடும் நிலையில் பால், தண்ணீர் இல்லாமல் பலர் தவித்தனர். வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வசிப்பவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியதுள்ளது. இதனால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க அவர்கள் படகு போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications