கர்நாடகாவைக் கண்டித்து புதுவையில் செப். 16-ல் முழு அடைப்புக்கு தமிழ் அமைப்புகள் அழைப்பு!
புதுச்சேரி: கர்நாடக அரசைக் கண்டித்து புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அங்குள்ள தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் கலவரம் வெடித்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் கர்நாடக மாநிலத்தைக் கண்டித்து போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. புதுவையிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
புதுச்சேரியில் கர்நாடகா வங்கி முற்றுகையிடப்பட்டது. இன்று மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கடந்த ஒருவார காலமாக தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்தும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.