முண்டேவுக்கு பதிலாக மகாராஷ்டிரா முதல்வரின் படம் போட்டு அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தமிழ்நாடு பாஜக
காஞ்சிபுரம்: மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு பதிலாக மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவானின் படம் போட்ட அஞ்சலி போஸ்டர்களை ஒட்டிய பாஜகவினரால் காஞ்சிபுரம் நகரமே அல்லோகலப்பட்டுவிட்டது.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். நாடு முழுவதும் அவரது மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகர பாஜகவினர் சார்பில் அஞ்சலி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் அதிர்ச்சி என்னவென்றால், இந்த போஸ்டர்களில் மரணமடைந்த கோபிநாத் முண்டேவின் படத்திற்கு பதிலாக மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவானின் படம் இடம்பெற்றிருந்தது.
இதைப்பார்த்த பொதுமக்களில் சிலர் அதிர்ச்சியடைந்து, பாஜகவினரிடம் தகவல் அளித்தனர். இதையறிந்த பாஜகவினர், தவறை உணர்ந்து, நகர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக கிழித்தெறிந்தனர். இதன்பிறகு புகைப்படம் இல்லாமலேயே மீண்டும் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இது குறித்து பாஜ நிர்வாகிகள் கூறுகையில், உருவ ஒற்றுமையில் மறைந்த அமைச்சரும் மகாராஷ்டிர முதல்வரும் ஒரே மாதிரி இருந்ததால் அச்சக ஊழியர்கள் தவறுதலாக முதல்வரது படத்தை இடம்பெறச் செய்துவிட்டனர். இதில் உள்நோக்கமில்லை. தவறுக்கு மிகவும் வருந்துகிறோம் என்று கூறினர். திராவிட கட்சி நிர்வாகிகள் போஸ்டர் அடிப்பதிலும், கட்-அவுட் அடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அடுத்த 'ஜனாதிபதி வாழ்க' என்கிற அளவுக்கு அதிபயங்கரமாக யோசித்து போஸ்டர் அடிப்பார்கள். ஆனால் தமிழக பாஜக இதில் குழந்தை என்பதை நிரூபித்துவிட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை துவங்கும்முன்பே காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றதாக அக்கட்சி பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பாஜக போஸ்டரை வைத்து களேபரம் செய்துள்ளது. என்னே இந்த காஞ்சி போஸ்டர்களுக்கு வந்த சோதனை?












Click it and Unblock the Notifications