2018 -19 பட்ஜெட்: தமிழக சட்டசபையில் மார்ச் 15ல் தாக்கலாக வாய்ப்பு
2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15ல் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: 2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வரும் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.
இதன் பிறகு, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 15ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று மாலையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்றும், துறைவாரிய மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாட்களில் தாக்கல் செய்வது ஆகியவை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி பற்றி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படும். தமிழக பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.