பொங்கல் பண்டிகை.... தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகம் முழவதும் தை முதல்நாளான நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசல்களில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு பெண்கள் அலங்கரித்தனர். கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் பனை ஓலை வைத்து முற்றம் என அழைக்கப்படும் வீட்டு வாசலில் சூரிய பகவானை நோக்கி பானை வைத்து அதில் மஞ்சள் குலை சுற்றி பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கும் போது குலவையிட்டு அரிசி போட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர். பொங்கல் சமைத்த உடன், காய்கறிகள் படைத்து, கரும்பு வைத்து சூரிய பகவானை வணங்கினர். பின்னர் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்

தை முதல்நாள் பொங்கல்
பொங்கல் திரு விழாவில், முதல்நாளான நேற்று, அதிகாலையில், புதுப்பானையில், பொங்கலிட்டு, சூரியன் உட்பட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கரும்பு, மஞ்சள் கொத்து சமர்ப்பித்து, சிறப்பு வழிபாடுகளை மக்கள் நடத்தினர். வண்ணக் கோலங்களால், வீடுகளின் முன்பகுதி அலங்கரிக்கப்பட்டு, பூளைப்பூ, வேப்ப மர இலைகள், ஆவாரம் பூ சேர்த்து, காப்பு கட்டப்பட்டது.

கோவில்களில் வழிபாடு
பொங்கலையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். சவுரிராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

குக்கர் பொங்கல்
நகரங்களில் பெண்கள் வீட்டு கியாஸ் அடுப்புகளில் குக்கரில் சர்க்கரை பொங்கல் வைத்து நண்பர்களுக்கு வழங்கினர். பாரம்பரியம் மறக்காமல் இருக்க பல இடங்களில் மக்கள் சமத்துவ பொங்கலிட்டனர், இளைஞர்கள் மற்றும் பெண்கள் , சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தன.

ஐடி பொங்கல்
பணிச்சூழல் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல.முடியாத ஐடி நிறுவன ஊழியர்கள், அலுவலகத்தில் பொங்கல் கொண்டாடினர். வெட்டவெளியில் பொங்கலை கொண்டாடும் சூழல் இல்லையென்றாலும், உள்ளரங்கிலேயே உற்சாகம் பொங்க இவர்களின் பொங்கல் கொண்டாட்டம் அரங்கேறியது.

விளையாட்டு போட்டிகள்
கரும்பை ஒடித்தல், உரி அடித்தல் போன்ற விளையாட்டுகளை உள்ளரங்கிலேயே நடத்தி அசத்திவிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நகரத்தில் வாழ்ந்தாலும் கிராமத்தினரைப் போல நன்றாகவே பொங்கலைக் கொண்டாட முடியும் என்று இவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.











Click it and Unblock the Notifications