‘சிறுத்தை’ பட பாணியில் பெண்களிடம் நகையை அபேஸ் செய்த மூவர் கைது
சென்னை: சென்னையில் பரிகார பூஜை செய்வதாக பெண்களிடம் நகைகளை மோசடி செய்த காவி உடை அணிந்த மூன்று போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவராக தொழில் செய்கிறார். இவரது மனைவி சுந்தரி வயது 52. செவ்வாய்கிழமையன்று பகல் 11 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது காவி உடை அணிந்த 3 பேர் ஜோசியம் பார்ப்பதாக சொல்லி சுந்தரி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் சுந்தரிக்கு தோஷம் இருப்பதாகவும், தோஷத்தை கழிக்க பரிகாரம் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்தனர்.இதைக் கேட்டு அஞ்சிய சுந்தரி தோஷம் கழிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.
உடனே பிளாஸ்டிக் டப்பா ஒன்றை சுந்தரியிடம் கொடுத்தனர். அதற்குள் சாயத்தண்ணீரை ஊற்றினார்கள். சாயத்தண்ணீரை, மாந்திரீக தண்ணீர் என்று கதைவிட்ட அவர்கள் சுந்தரி கழுத்தில் போட்டிருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை கழற்றச்சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதைக் கேட்ட சுந்தரியும் தங்க சங்கிலியை கழற்றினார். அந்த தங்க சங்கிலியை வாங்கி சாமியார் வேடத்தில் இருந்த ஆசாமிகள், சாயத்தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் போட்டனர்.

பரிகார பூஜை
மாலை 4 மணி வரை டப்பாவை திறக்கக்கூடாது என்றும், 4 மணிக்கு மேல் டப்பாவை திறந்து அதற்குள் இருக்கும் தங்க சங்கிலியை எடுத்து அணிந்து கொண்டால் தோஷம் போய்விடும் என்றும் கதை விட்டனர். இதைக் கேட்ட சுந்தரியும் டப்பாவை அப்படியே மூடி வைத்துவிட்டார். இதன்பின்னர் பரிகாரத்திற்குரிய பணத்தை வாங்கிய சாமியார்கள் கம்பி நீட்டிவிட்டனர்.
நகை மாயம்
சில மணிநேரம் கழித்து பிளாஸ்டிக் டப்பாவை திறந்து பார்த்த சுந்தரி அதிர்ச்சியடைந்தார். காரணம் அதற்குள் இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை காணவில்லை. சாமியார் வேடமணிந்த ஆசாமிகள் தங்க சங்கிலியை நைசாக ஆட்டையைப் போட்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
மடக்கிய போலீஸ்
இதனையடுத்து சுறுசுறுப்பாக இயங்கிய போலீசார் தப்பி ஓடிய போலி சாமியார்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்களது பெயர் மைக்கேல், அந்தோணி, செந்தில் என்று தெரிய வந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அவர்களது சொந்த ஊர் என்பதும், இதுபோல் சாமியார் வேடத்தில் சென்று நிறைய பெண்களிடம் நகை மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.
சிறையில் அடைப்பு
சிந்தாதிரிப்பேட்டையில் இதேபோல இன்னொரு பெண்ணிடமும் தோஷம் கழிப்பதாக ஏமாற்றி ரூ.6 ஆயிரம் பணத்தை மோசடி செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மோசம் செய்த தங்க சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுத்தை பாணியில்
சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்திக்கும் சந்தானமும் இதே பாணியில் பெண்களை ஏமாற்றி பணம் நகையை ஆட்டையைப் போடுவார்கள். அதேபாணியை பின்பற்றி மூன்று போலிசாமியார்கள் நகையை அபேஸ் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலி சாமியார்கள் மூவரும் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications