தமிழக அரசு ஊசலாடிக்கொண்டிருக்கிறது... சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
தமிழக அரசு ஊசலாடிக்கொண்டிருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை: தமிழக அரசு ஸ்திரமற்ற, ஊசல் ஆடிக் கொண்டிருக்கும் அரசு என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், விசாரணை குழுவை சந்திக்க தயார் என்று டி.டி.வி. தினகரன் கூறிவிட்டார், விசாரணையை எதிர்கொள்ள தயார் என அப்பல்லோ தலைவரும் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் திரும்பத் திரும்ப பேசி மக்களையும் அதிமுகவினரையும் குழப்ப வேண்டாம் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்த நாஞ்சில் சம்பத் மீது அவதூறு வழக்கு பாய்ந்தது. பின்னர் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை அடுத்து மீண்டும் அரசுக்கு எதிராக பேச தொடங்கி விட்டார் நாஞ்சில் சம்பத்.
எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ஜனநாயகத்தைச் சிரச்சேதம் செய்ய துணிந்துவிட்டார். சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஆகியோர் சேர்ந்து இந்த ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள். சபாநாயகர் தனபால் வரலாற்றுப் பழியைச் செய்திருக்கிறார் என்று விமர்சித்தார் நாஞ்சில் சம்பத்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் காவிரியில் நீராடியிருப்பதன் மூலம் காவிரி அழுக்காகி விட்டது. அவர்கள் செய்யக்கூடாத பாவங்களைச் செய்துவிட்டு எந்தத் தீர்த்தத்தில் குளித்தாலும் புண்ணியம் கிடைக்கப் போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்பு கிண்டலடித்திருந்தார் நாஞ்சில் சம்பத்.