சட்டமன்றத் தேர்தல்: தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
குற்றாலம்: சட்டமன்றத் தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தமிழக,கேரளா போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தமிழ்நாடு, கேரளா மாநில எல்லைப் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடந்தது.
இதில் நெல்லை மாவட்ட எஸ் பி. விக்ரமன், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட ரூரல் எஸ் .பி. சசி குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு போலீசார் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் கூடுதல் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்துவது, எல்லைப் பகுதியில் நடைபயணம் செல்வோர் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றால் விசாரணை நடத்துவது.
பணம், மது மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிர கண்காணிப்பு செய்வது உட்பட பல்வேறு பணிகளை இரு மாநில போலீசார் இணைந்து மேற்கொள்வது, தேர்தல் அமைதியாக நடக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.