கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழர்கள் பங்கேற்பு!
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புதிதாத கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து 82 பேர் கலந்து கொண்டனர்.
கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் கோயிலில் கடந்த 7ம் தேதி திறப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் திறப்பு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் டிச.23-ம் தேதி புதிய தேவாலயம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் இருந்து 3 படகில் 100 பக்தர்களையாவது கச்சத்தீவு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் கச்சத்தீவு தேவாலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டு தமிழர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், இலங்கை கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகள், நெடுந்தீவு மக்களுடன், தமிழகம் சார்பில் ராமேஸ்வரம் பங்குதந்தை சகாயராஜ் தலைமையில் 4 அருட் தந்தையர்கள் உள்பட 82 பேர் கலந்து கொண்டனர்.