இருக்கு.. இன்னைக்கும் இருக்கு.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்!!
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் சென்னை மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இடியுடன் கனமழை
இன்றும் பிற்பகல் முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
மத்திய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பது மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தென்மேற்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்பதால் செப்டம்பர் 20-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகளவாக சோழவரத்தில் மழை
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நீலகிரி, ஆலங்குடி, மாதவரம், புதுக்கோட்டையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.