தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல்?.. சென்னையில் இரண்டரை வயது சிறுமி பலி!
அந்த சிறுமியின் பெயர் தர்ஷினி. இரண்டரை வயதாகிறது. சென்னையைச் சேர்ந்த இச்சிறுமி சனிக்கிழமையன்று மரணமடைநதாள். அவளுக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அக்குழந்தையின் ரத்தத்தில் புரதத்தின் அளவு மிகவும் குறைந்து போனதாலும் மரணத்தைச் சந்தித்ததாக தெரிகிறது.
அதேசமயம், இக்குழந்தை பன்றிக்காய்ச்சலுக்குக் காரணமான எச்1என்1 வைரஸ் தாக்குதலால் பலியாகவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
அக்டோபர் 21ம் தேதி இக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் அவளுக்கு நெப்ராட்டிக் சின்ட்ரோம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்டெராய்ட் மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். இந்த நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே அவளை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நிலைமை மோசமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாள்.