என்னாது... பஸ் ஸ்டிரைக்கா...!!! பார்த்தா அப்படி தெரியலையே?!
சென்னை: நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த தமிழக போக்குவரத்து தொழிலார்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தையில் 5.5% ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முடிவுக்கு தி.மு.க, இடதுசாரி, தே.மு.தி.க, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனையடுத்து 14 தொழிற்சங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்தன. எனினும் வழக்கத்தை விட இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதை முன்னிட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் கோரிக்கையாகும். இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
இறுதி கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்கள் ஆதரித்து கையெழுத்திட்டன.

14 தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
தி.மு.க.வின் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்கவில்லை. பெரும்பாலான உறுப்பினர்களை கொண்ட தொழிற்சங்கங்களை புறக்கணித்து விட்டு ஆளில்லா சங்கங்களை வைத்து போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தொ.மு.ச. அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தொ.மு.ச., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன.

வழக்கம் போல ஓடின
14 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. ஆனாலும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 28 சங்க தொழிலாளர்களை கொண்டு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் ஓடின.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தன. தமிழ் புத்தாண்டு என்பதால் வடபழனி, மாங்காடு, திருவேற்காடு, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டன.

இயல்பு வாழ்க்கை
விடுமுறை நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 3058 மாநகர பஸ்களை விட இன்று 3117 பஸ்கள் சென்றன. கூடுதலாக 59 பஸ்கள் இயக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும்
இதே போல கோவை, சேலம், கும்பகோணம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து கழகங்களிலும் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications