திருமலை நாயக்கருக்கு அரசு விழாவா? திரும்பப் பெறக் கோரி தைப்பூச நாளில் 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்
சென்னை: திருமலை நாயக்கருக்கு அரசு விழா எடுப்பதைக் கண்டித்து தைப்பூச நாளில் 100 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவர் என்று தாயகத் தமிழர் பேரியக்கத்தின் நிறுவனர் சீதையின் மைந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் கடவுள் முருகப் பெருமானுக்கும் வடலூர் வள்ளல் பெருமானுக்கும் உகந்த தைப்பூசத் திருநாளில் தமிழினப் பகைவன் திருமலை நாயக்கனுக்கு தமிழக அரசே பிறந்த நாள் விழா எடுக்குமாம்! தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு! இந்த தமிழின விரோத நடவடிக்கை முடிவையும் அறிவிப்பையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அனைத்து தமிழின அமைப்புகளையும் ஒருங்கிணைத்து எனது தலைமையில் தமிழினப் போராளிகள் நூற்றுவர் தைப்பூசத் திருநாளன்று (சனவரி 24) சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வர்.
இவ்வாறு சீதையின் மைந்தன் தெரிவித்துள்ளார்.