தொடர் போராட்டம்.. குலுங்கிய சென்னை..விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாசாலையில் திடீர் மறியல்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையை உலுக்கும் வகையில் வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழர் எழுச்சி இயக்கத்தினர் திடீரென அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சென்னையை உலுக்கும் வகையில் போராட்டம் வெடித்துள்ளது.
இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை மாணவர்கள் இளைஞர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் சென்னையே போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்தது.
இதனைத் தொடர்ந்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அரை நிர்வாணப் போராட்டத்தை மேற்கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

ரயில் நிலையம் முற்றுகை
இதே போன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையம் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா சாலை மறியல்
எழும்பூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே சென்னை அண்ணா சாலையில் தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காவிரி மேலாண்மை வாரியம்
இந்தப் போராட்டம் குறித்து தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தவிட்டும் கர்நாடக அரசிற்கு ஆதரவாக மத்திய அரசு அமைக்காமல் துரோகம் செய்து வருகிறது.

மீனவர் படுகொலை
இதே போன்று, இலங்கை அரசு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்திய அரசு துணைபோகிறது. மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு இடமில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து தமிழகத்தை மிரட்டுகிறது.

தனித் தமிழ் நாடு
தமிழ்நாடு தனியாக போக வேண்டும் என்று இந்தியா விரும்புகிறதா? அப்படி போக வேண்டும் என்றால் அதனை இந்திய அரசு முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று வேலுமணி ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications