குடிசைகளே இல்லாத சென்னை வேண்டும்- தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை
சென்னை: வெள்ளத்திற்கு பிறகாவது குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், ''வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் குடிசைவாசிகள் என்பதால் குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கும் பெரும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள் என்ற வகையில், ஆக்கிரமிப்பவர்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் கொண்டு வந்து தண்டிக்கப்பட வேண்டும். இழந்த மக்களுக்கு அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க உதவ வேண்டும். டாக்டர்கள் மருத்துவ சேவை, எஞ்சினியர்கள் பழுதடைந்த வீடுகளை சரி செய்வதில் அதிக சலுகைகள் கொடுக்கலாம். வங்கியாளர்கள் வட்டி தள்ளுபடி செய்யவேண்டும்.
விற்பனையார்கள் டி.வி, பிரிட்ஜ், மிக்சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை அதிக லாபமில்லா விற்பனை அளிக்கலாம். புதிய தவணை முறைகளை அறிவிக்கலாம். ஏனென்றால் நடுத்தர மக்கள் இழந்திருப்பதில் இவைகள் அதிகம். இதே போல அத்தனை துறை சார்ந்தோரும் இப்போது உதவிக்கொண்டிருந்ததைப் போல மேலும் உதவ வேண்டும்''என்று கூறியுள்ளார்.