ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நாடகம் நடத்துவதா? தமிழிசை காட்டம் !
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நாடகம் அதிமுக அமைச்சர்கள் நாடகம் நடத்துவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள தான் அமைச்சர்கள் நாடகம் நடத்துகின்றனர் என்று அதிமுகவில் நிலவி வரும் குழப்பமான சூழல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் கடந்த சில நாட்களாக உச்சகட்ட குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்றிரவு தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் கூடி தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திலும் இரவில் தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது எனக் கூறினார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் பிரச்சினையில் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியை காப்பாற்ற அவர்கள் நாடகம் நடத்துகின்றனர். மக்கள் மீது நம்பிக்கை கொண்ட நிலையான அரசு வேண்டும். மக்கள் நிலைப்பாடுக்கு எதிராக ஆட்சி செய்தால் பாஜக அதை எதிர்க்கும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications