பொதுசிவில் சட்டத்தை குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது- தமிழிசை சவுந்தரராஜன்
பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸின் குஷ்பு ஆதரிப்பதை வரவேற்கிறேன் என பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது:
பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது பெண்ணுரிமைக்கு எதிரான செயல். இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு ஆதரிப்பதை வரவேற்கிறோம்.
இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்த குஷ்பு பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பது நல்ல விஷயமே. இதை அனைவருமே வரவேற்க வேண்டும்.
மருத்துவமனையில் தாம் இருந்த போது நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசித்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை வேறு. தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை வேறு.
மருத்துவ சிகிச்சைகளை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.