ஜெ.வின் அறிவிப்பு ஆரோக்கியமானது, வரவேற்கிறோம்: தமிழிசை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது ஆரோக்கியமான முடிவு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடி ஜெயலலிதாவைச் சந்தித்தது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது. இளங்கோவன் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளங்கோவனைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டாம் என அதிமுகவினருக்கு தமிழக முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு ஆரோக்கியமான முடிவு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பை ஆரோக்கியமான முடிவாகவே பார்க்கிறேன்.
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று இளங்கோவன் கூறியது அவர் தனது தவறை உணர்ந்தது போல் தெரிந்தாலும் அவர் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். அதுதான் ஒரு ஆரோக்கியமான அரசியல் தலைவருக்கு அழகு.
அதிமுக தொண்டர்கள் தங்கள் உணர்வுகளை போராட்டங்கள் வாயிலாக காட்டி விட்ட நிலையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரவேற்கிறேன்.
சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக இளங்கோவனை ஆதரிப்பதாக முதல்ழர் சுட்டிக் காட்டி உள்ளார். இதைத்தான் பாஜக ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியது. அரசியல் கொள்கை, கோட்பாடுகளில் மாற்றம் இருந்தாலும் பிரதமரும், முதல்வரும் சந்தித்து பேசியதை கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டதை கண்டிக்க கூடிய நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
பெண்களுக்கு ஆதரவாக பேசும் பெண்ணியவாதிகள் கூட பெண்களுக்கு எதிராக கூறப்பட்ட கருத்தாக பார்க்காதது வருத்தமான விஷயம்.
எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணியாற்றும் காலக்கட்டத்தில் இருபாலினர் சந்திப்பை இப்படி கொச்சைப்படுத்த முடியுமென்றால் இருபாலரும் இணைந்து பணியாற்றவே முடியாது.
எனக்கு பதில் சொல்லித்தான் இளங்கோவன் தனது தகுதியை இழக்க வேண்டும் என்பதில்லை. எப்போது ஒரு பிரதமர், முதல்வர் சந்திப்பை தரம் தாழ்ந்து கொச்சைப்படுத்தினாரோ அப்போதே அவர் தனது தகுதியை இழந்து விட்டார்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை நான் மதிக்கிறேன். நாங்கள் நேர்மறையான அரசியலை நடத்துகிறோம்.
நான் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் கூட அவரை பதவி நீக்கம் செய்ய சொல்லவில்லை. நீங்களும் ஒரு பெண் தலைவர். பெண்கள் அரசியலில் முன்னேறி வரும் போது எங்களை இப்படி கொச்சைப் படுத்துவது நியாயம்தானா? என்றுதான் கேட்டிருந்தேன் என தமிழிசை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications