பிளஸ் 2 ரிசல்ட்: டாப் 3 பெஸ்ட் மற்றும் மோசமான மாவட்டங்கள் இவைதான்!
சென்னை: இந்த வருடமும் கடந்த ஆண்டை போலவே பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது வேலூர் மாவட்டம், ஆனால் விருதுநகர் மாவட்டம் தனது பெருமையை தக்க வைத்து முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள்.
மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
விருதுநகர் முதலிடம்
இதில், விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், 97.85 ஆகும். எனவே இம்மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 92.1% ஆக உள்ளது.
ராமநாதபுரம், ஈரோடு
2வது இடத்தில் அதன் அண்டை மாவட்டமான ராமநாதபுரம் உள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 96.77 சதவீதம். டாப் வரிசையில் 3வது இடம் ஈரோடு மாவட்டத்திற்கு. இம்மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.69 ஆகும்.
வேலூருக்கு கடைசி இடம்
இதேபோல கடைசி 3 இடங்களிலுள்ள மாவட்டங்கள் பட்டியல் இவைதான்: வேலூர் 84.99 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
கடலூர், கிருஷ்ணகிரி
கடலூர் 84.66 சதவீதம், கிருஷ்ணகிரி 88.02 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. கடைசி 3 இடங்களை பிடித்துள்ள மாவட்டங்களுக்கு கல்வி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பிளஸ் 2 ரிசல்ட் அம்பலமாக்குகிறது.