கடையடைப்புக்காக ஹோட்டல்களை மூட முடியாதாம்.. ஓனர்கள் சங்கம் அறிவிப்பு #TamilNadu bandh
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், இந்த பந்த்தில் கலந்துக்கொள்ளவில்லை என்று தமிழக ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்றைக்கு கடையடைப்பு நடைபெற்றாலும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் என்றும் ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதைக் கண்டித்து, கடந்த சில தினங்களாக கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா, ராம்ராஜ்நகர், பெங்களுரூ, மைசூர் போன்ற நகரங்களில் கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தமிழக பதிவெண் கொண்ட 300க்கும் அதிகமான வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர். தமிழக லாரி, வேன் ஓட்டுநர்கள் சிக்கினால் அவர்களை அடித்து, உதைத்து, நிர்வணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இது தமிழகத்தை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டது. ஆம்னி பஸ், லாரி, வேன்கள் ஓடாது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையடைப்பு போராட்டம்
காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு மற்றும் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.இதனை ஏற்றுக்கொண்டு தனியார் பள்ளிகள் சங்கம், லாரி, தனியார் பேருந்து அமைப்புகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், திரைத்துறையை சேர்ந்த பல சங்கங்கள் என பலதரப்பிலும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஓட்டல்கள் சங்கம் ஆதரவில்லை
இந்நிலையில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தமிழக அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம் என முடிவு செய்து இந்த பந்த்தில் கலந்துக்கொள்ளவில்லை என அறிக்கைவிட்டுள்ளார். இது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறு ஓட்டல்கள் மூடல்
தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் பல சங்கங்கள் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு மதிப்பளிக்காமல் ஓட்டல்கள் சங்கம் நடந்துக்கொண்டது பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த அறிக்கை எங்களை கட்டுப்படுத்தாது, நாங்கள் நாளை நடைபெறும் பந்தில் கலந்துக்கொள்வோம் என வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம் பகுதியில் சிறு அளவில் ஓட்டல்கள் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications