நாஞ்சில் சம்பத்தை அடக்கி வையுங்கள்... தமிழிசை எச்சரிக்கை: வீடியோ
நாஞ்சில் சம்பத் தரக்குறைவாக அரசியல் தலைவர்களை விமர்சிப்பதால் அவரது கட்சி தலைவர் அவரை அடக்கி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மதுரை: அரசியல் தலைவர்களை தரக் குரைவாக விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத்தை அவரது கட்சித் தலைமை அடக்கி வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அதிமுக ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களை மட்டுமில்லாது அனைத்துக் கட்சியை சேர்ந்த தலைவர்களையும் சமீபகாலமாக தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.
அவருடைய பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தமிழருவி மணியன் வரை பலியாகி வருகிறார்கள். இந்நிலையில் அவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை 'வாயால் வடை சுடும் பெருமாட்டி' உள்ளிட்ட பல வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்துப் பேசிய தமிழிசை, நாஞ்சில் சம்பத் அனைத்து அரசியல் தலைவர்களையும் மிகவும் தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார். இது தமிழர்களின் பண்பல்ல. தமிழக அரசியலில் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்காதவர்களையும் கூட அவர் கடுமையக விமர்சிக்கிறார். அவரை கட்சித் தலைமை அடக்கி வைக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.