ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார். குறிப்பாக வர்தா புயல் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண உதவிகள் கோர உள்ளார்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலையை வைக்கவும் பிரதமரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அங்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.