இரட்டை இலை கிடைத்த பூரிப்பு... ராமநாதபுரம் விழாவில் 'புன்னகை மன்னனான' முதல்வர்!
இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவில் உற்சாகமாக பேசினார்.
ராமநாதபுரம் : இரட்டை இலை சின்னம் கிடைத்த பூரிப்போடு முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றினார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிலும் மேடைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களிலும் கூட எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமியின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதனிடையே விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி உற்சாகமாக புன்னகைத்தபடியே பேசினார். அவர் பேசியதாவது :
25 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது நம்மிடம் இரட்டை இலை இல்லை தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ராமநாதபுரம் மவாட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கு ராசியான மாவட்டம். அந்த அடிப்படையில் அந்த இருபெரும் தலைவர்களுடைய ராசியான மாவட்டத்திலே இரட்டை இலை சின்னம் கிடைத்து நமக்கு இந்த மாவட்டத்தின் ராசியை தெளிவுபடுத்தி இருக்கிறது.
தொண்டர்கள் முகத்தில் மலர்ச்சி
கடந்த 25 மாவட்டங்களுக்கு சென்ற போது இரட்டை இலையை காண முடியவில்லை, அதனை காட்டக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. இந்த மாவட்டத்திற்கு வந்த போது தான் வழி நெடுகிலும் மாவட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் இரட்டை ஏந்தி தங்களின் முகமலர்ச்சியை காட்டியுள்ளனர். இரட்டைஇலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, இது எம்ஜிஆர் கண்டெடுத்தது. ஜெயலலிதா கட்டிக்காத்த இரட்டை இலை ஒன்றரை கோடி அதிமுகவினரின் உயிர் மூச்சு.
விட்டுவிடவும் மனமில்லை
சிலர் இரட்டை இலை போனால் பரவாயில்லை, இரட்டை இலையை நம்பி நாங்கள் இருக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கு ஏன் இவ்வளவு போராட வேண்டும், விட்டுவிட்டு சென்றுவிட வேண்டியது தானே, ஆனால் அதற்கு மனமில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு சதிசெய்து இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கழகத்தை அழிக்கப் பார்த்தார்கள்.
நீதிக்கு கிடைத்த வெற்றி
இரட்டை இலையை முடக்கப்பார்த்தார்கள், ஆனால் மேலே இருக்கும் இரு பெரும் தெய்வங்களின் ஆசியால் நல்ல தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கி நல்ல தீர்ப்பை தந்துள்ளது. தர்மத்திற்கு, நீதிக்கு கிடைத்த வெற்றியாக இரட்டை இலை நமக்கு கிடைத்துள்ளது.
எதிரிகளை வீழ்த்துவோம்
விரைவில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஜெயலலிதாவின் கோட்டையான இந்த தொகுதியில் இரட்டை இலைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுவோம். எதிரிகளை வீழ்த்துவோம், அதிமுக தான் தமிழகத்திலே என்றும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்பதை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம். இந்தத் தேர்தல் மட்டுமல்ல வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் வெற்றிப் பாதையை வகுத்துக் கொண்டே செல்வோம் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.