சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை மையம்!
வங்கக்கடலில் உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி வங்கக்கடலில் அடுத்த வாரம் உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 27 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய வடகிழக்குப் பருவமழை பின்னர் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது.
தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் வகையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிஷா நோக்கி நகர்ந்ததால் தமிழகம் கடந்த ஒரு வாரமாக மழை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இதுவரை பெய்ய வேண்டிய சராசரி அளவு மழைக்கூட தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.
21ஆம் தேதி ஒன்று
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த வாரம் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 21ம் தேதி அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் மழை இருக்கும்
அந்தமான் அருகே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுநிலையை பொறுத்தவரை பெரும்பாலும் அது தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. ஆனால் காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
மேலும் அடுத்தபடியாக தென்கிழக்கு வங்க கடலில் வரும் 27ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை அறிவிப்பால் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் காய்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகளால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.