தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, படகுகள் பறிமுதல் - இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மீனவர்களின் 2 படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடிக்கச்செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 80 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறைகளில் அடைத்தனர். இதேபோல 160க்கு மேற்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 43 படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன.
மீதம் உள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கக்கோரி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளிடமும் வலியுறுத்தி வந்தனர். மத்திய அரசும் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு செல்கிறார். இதை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக, தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 பேர், மண்டபத்தை சேர்ந்த 6 பேர், நம்புதாளையைச் சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 46 பேர், நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 76 மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 படகுகளில் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.