அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மாநிலங்கள் உரிமையை பறிக்கிறது.. மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றும், மாநில உரிமையை பறிக்கும் வகையில் அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்த மசோதாவின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரியான அணைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்கவும் முடியும். இந்த பாதுகாப்பு ஆணையம் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
நதிநீர் பங்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதற்கு கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.