மாட்டிறைச்சி தடை சட்டத்தை தமிழக அரசு ஏற்காமல் இருக்க வேண்டுமா? அமைச்சர் போட்ட அதிர்ச்சி நிபந்தனை
சென்னை: மாட்டிறைச்சி தடை சட்டத்தை தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்த்தால் தமிழக அரசு ஏற்காது என செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு தனது விதிமுறைகளை மாற்றியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.
பல மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, சட்டத்தை ஆய்வு செய்து பதிலளிப்பதாக காலம் கடத்தும் நோக்கத்தில் பதிலளித்தார்.

கடம்பூர் ராஜு பதில்
மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப பதில் சொல்லலாம் என தமிழக அரசு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறிய பதிலும் அப்படித்தான் உள்ளது.

தொடர்ந்து எதிர்த்தால் மட்டுமே
காஞ்சிபுரத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, கடம்பூர் ராஜு கூறுகையில், மாட்டிறைச்சி தடை சட்டத்தை மக்கள் தொடர்ந்து எதிர்த்தால் தமிழக அரசு அதை ஏற்காது என தெரிவித்தார். அதிமுகவுக்கோ, அரசுக்கோ இந்த விஷயத்தில் எந்த ஒரு கொள்கையும் இல்லை என்பதை அமைச்சர் பதில் பிரதிபலிக்கிறது. மக்கள் எந்த பக்கம் அதிக ஆதரவை தெரிவிக்கிறார்களோ அந்த பக்கம் செல்வது என்பதே அரசின் நிலைப்பாடு என்பது அம்பலமாகியுள்ளது.

மக்கள் மோத வேண்டுமா
சென்னை ஐஐடியில் நடந்ததை போல மாட்டிறைச்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பு மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு பலமான தரப்பு எது என்பதை நிரூபித்த பிறகு அரசு முடிவெடுக்கும் என்பதே கடம்பூர் ராஜு பதிலில் இருந்து தெரியவருகிறது. அதேநேரம் ஒருபக்கம் தடைக்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக தாக்கும்போக்கையும் காவல்துறை கடைபிடித்து வருகிறது.

ஸ்டாலின் புரிந்துகொள்ளவில்லை
நிருபர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் பாஜக பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார் என்றார் கடம்பூர் ராஜு.












Click it and Unblock the Notifications