மெர்சல் படம் எதிரொலி? தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புது சட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி
நிருபர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்களை குறைக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்களை குறைக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் நடைபெறும் முறைகேடுகள், பணத்திற்காக எப்படியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன என்பது குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மெர்சல் திரைப்படத்தின் ஜிஎஸ்டி குறித்த காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த படம் அதிக மக்களை சென்று சேர்ந்துவிட்டது. இதன் எதிரொலியாக தனியார் மருத்துவமனைகள் குறித்த விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்களை குறைக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். அடுத்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த சட்டம் இயற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மெர்சல் திரைப்பட காட்சிகள் எதிரொலியாகத்தான் அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ பரிசோதனை குறித்து படத்தில் இடம் பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கமும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.