தமிழக காவல்துறை ஏவல்துறையாகவும், வசூல் துறையாகவும் செயல்படுகிறது: விஜயகாந்த் கண்டனம்
தமிழக காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து வசூலை மட்டுமே குறிவைக்கிறது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவல்துறை ஏவல்துறையாகவும், ஒரு கோடி ரூபாய் இலக்கு வைத்து பணம் பிடுங்கும் வசூல் துறையாகவும் செயல்பட்டு வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியில் நேற்று இரவு வாகன சோதனையின் போது, நிற்காமல் சென்ற இரு சக்கரவாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்துக் கீழே தள்ளியதில் அதில் பயணம் செய்த உஷா என்கிற கர்ப்பிணிப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காவல்துறையின் இந்த வெறிச்செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பலியான கர்ப்பிணிப்பெண்
அந்த அறிக்கையில், திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த தம்பதி ராஜா மற்றும் உஷா அவர்களை காவல் துறையினர் கையை காட்டி நிறுத்தியுள்ளனர். அவர் நிற்காமல் சென்றதால், காவலர் காமராஜ் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று அந்த தம்பதி சென்ற இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதில், நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே மூன்று மாத கர்ப்பிணிப் பெண்ணான உஷா உயிரிழந்துள்ளார்.

சரியில்லாத ஆட்சி நிர்வாகம்
இந்தச் செய்தியை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. மக்களை காக்கவேண்டிய காவல்துறை தமிழக அரசின் ஏவல்துறையாக செயல்படுவது வேதனையாகவுள்ளது. ஒருபுறம் மன உளைச்சலால் காவலர்கள் தங்களை, தாங்களே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் தமிழ்நாட்டில் பார்க்கமுடிகிறது. அதேபோல் அராஜகத்தில் ஈடுபடும் காவல்துறையினரையும் இதே தமிழ்நாட்டில் தான் பார்க்கமுடிகிறது. இந்த குறைபாடுகள் எப்படி வருகிறது என்றால் ஆட்சி நிர்வாகம் சரியில்லாததன் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

மாதம் ஒரு கோடி ரூபாய்
காவல்துறையினர் மாதத்திற்கு சுமார் 1 கோடிக்கு மேல் மக்களிடத்தில் வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். வசூலிப்பதையும், ஊழல் செய்வதையுமே குறிக்கோளாக வைக்காமல், மக்களுக்கு சேவைசெய்யும் காவல்துறையாக இருக்கவேண்டும். மக்கள் பணியாற்றுவதை விடுத்து காவல்துறை ஏவல்துறையாகவும், வசூல் துறையாகவும் இருப்பது வேதனையளிக்கிறது.

சேவை மனப்பான்மை தேவை
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். மக்களை காக்கவேண்டிய காவல்துறை, மக்களை காவுவாங்கும் துறையாக இல்லாமல், சேவை செய்யும் காவல்துறையாக இருக்கவேண்டும் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications