அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால்.. பாரதிராஜா பன்ச்!
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்தார்.
கடந்த 21 ஆண்டுகளாக ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது ரஜினி பேசுகையில், தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் கெட்டு போயுள்ளது. என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். இன்று நான் நடிகன், நாளை நான் என்னவாக வேண்டும் என்று கடவுள் தீர்மானிக்கிறாரோ அதன்படி நான் செயல்படுவேன்.
அவரவருக்கு கடமைகள், வேலைகள் உள்ளது. எனவே ரசிகர்கள் பத்திரமாக ஊருக்குச் செல்லுங்கள், போர் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்றார். ரஜினியின் இந்த கருத்தால் அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதி ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? இதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும். இதற்கான முயற்சியில் தமிழக இளைஞர்கள் இப்போதே ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications