வெயிலூர் எப்போது புயலூரானது? வேலூர் விஐடியில் புழுதி பறக்கும் பேய்க்காற்றுடன் மழை.. வெதர்மேன் வீடியோ
வேலூர்: வேலூர் விஐடியில் நேற்று மாலை புழுதி புயலுடன் கூடிய கனமழை பெய்ததாக தமிழ்நாடு வெதர்மேன் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு வடகிழக்கு பருவமழையில் ஏதோ புயல் உருவானது போல் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதுரை, திருச்சி, கரூர்,சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. கத்திரி வெயில் கடந்த 29ஆம் தேதியுடன் முடிவடைந்த போதிலும் இந்த வெயில் இன்னும் குறைந்த பாடில்லை.

சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சூட்டை கிளப்பி விடும் அளவுக்கு லேசான தூரலும் சில இடங்களில் மழையே இல்லாமலும் இருக்கிறது.
இந்த நிலையில் வேலூர் கடந்த சில தினங்களாக தகித்து வந்தது. இதனால் அங்கு எப்போதுதான் மழை பெய்யும் என மக்கள் காத்திருந்தார்கள். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதியெல்லாம் வேலூரில் 41.8 டிகிரி செல்சியஸாக வெப்பம் இருந்தது. அது போல் திருத்தணியும் தகித்துதான் வந்தது. கடந்த 8ஆம் தேதி தென்மேற்கு பருவமழை ஒரு வார காலம் தாமதமாக தொடங்கியது.
இதனால் வடமேற்கிலிருந்து தென்மேற்கிற்கு காற்று திசை மாறுபட்டால் மட்டுமே வெப்பநிலை குறையும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் வேலூரில் கனமழை பெய்தது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் பகுதியில் கடல் காற்று செல்வதால் நிறைய மேகக் கூட்டங்கள் உருவாகின. நேற்றைய தினம் வேலூரில் தீவிரமான மழை பெய்துள்ளது.

அது போல் வால்பாறையும் நல்ல மழையை பெற்றுள்ளது. கேரளாவிற்கு இதுதான் பருவமழை தொடக்கம். பாலவாக்கம், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர் பகுதிகளில் 41 டிகிரியை வெப்பநிலை தொட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வெப்பநிலை குறையும். வேலூரில் விஐடி கல்லூரியில் புழுதி புயலுடன் கூடிய மழை பெய்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் 55 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அதில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் ஏற்பட்டது போல் மழை வெளுத்துள்ளது. காற்று கடுமையாக வீசியுள்ளது. தூசு துரும்புகள் பறக்கின்றன. கேமராவில் உயர்ந்த கட்டடங்கள் மேல் ஏதோ பனிப்படலம் போல் காட்சியளிக்கிறது. வெயில் காலத்தில் அதுவும் தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படியொரு மழையா என ஆச்சரியப்பட வைக்கிறது.












Click it and Unblock the Notifications