கர்நாடகாவில் பாஜகவை வெற்றி பெற வைக்க தமிழகத்தில் நாடகம் : திருநாவுக்கரசர் புகார்
தமிழகத்தில் போராட்டங்கள் எதற்காக நடக்கிறது என்று தமிழிசை தெரிந்துகொண்டு பேசவேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை : உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு மதிக்காததால் தான், தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி நடுநிலைமையுடன் செயல்படவேண்டியவர். ஆனால், அவரின் செயல்பாடுகள் அவர் ஆளும்கட்சி சார்ந்தவராக இருப்பதை உணர்த்துகிறது.
எனவே, அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டி, துணை ஜனாதிபதியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனு தந்துள்ளன. இதில், திமுக ஏன் கையெழுத்து போடவில்லை என்று, அவர்கள் தான் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், கர்நாடகாவில் பாஜகவை வெற்றி பெற வைக்கவேண்டி, தமிழகத்தில் நாடகம் நடத்தி வருகிறார்கள். ஆனால், அது பலிக்காது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று, சொல்லி வருவதை பொன்.ராதாகிருஷ்ணன் கைவிட வேண்டும். மாறாக, எந்த மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு மாநில அரசுக்கு உதவ வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் மத்திய பாஜக அரசு மதிக்காததால் தான் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதை முதலில் தமிழிசை செளந்தரராஜன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் என்பவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும். அதை விடுத்து அரசியல்வாதியை போல தி.மு.க. மீது குற்றம் சாட்டுவது அந்த பதவிக்கு அழகல்ல என்றும் தெரிவித்துள்ளார்.