திருவள்ளூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. 10,000 லிட்டர் பெட்ரோல் வீண்!
டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர்: பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீணானது.
துறைமுகத்திலிருந்து டேங்கர் லாரி ஒன்று 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கிற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது டேங்கர் லாரியானது அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் முன்னே சென்ற மற்றொரு லாரியை, டேங்கர் லாரி முந்த முயன்றது. இதில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மேம்பாலப் பகுதியில் கவிழ்ந்தது. லாரி குப்புற விழுந்ததால் அதன் டிரைவர் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிய அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லாரி தலைகீழாக கவிழ்ந்ததில், லாரியினுள் இருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. திடீரென பெட்ரோல் சாலைகளில் ஓடுவதைகண்ட பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினர். சாலைகளில் ஓடிய பெட்ரோல் 10 ஆயிரம் லிட்டருக்கும் மேல் என கூறப்படுகிறது.
உடனடியாக இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை ஓடிக் கொண்டிருக்கும் பெட்ரோல் மீது பீச்சி அடித்தனர். கிரேன்கள் வரவழைக்கப்பட்டு குப்புற விழுந்த லாரியை மீட்டகும் பணி நடைபெற்றது. இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து மீஞ்சூர் போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications