டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கிங்பிஷர் "கிக்"... மிடாஸ் சசிகலா கோஷ்டிக்கு செம "ஷாக்"!
டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கிங்பிஷர் பீர் வகைகள் கொள்முதல் செய்யப்பட இருப்பது மிடாஸ் நிறுவன சசிகலா கோஷ்டியை அதிரவைத்துள்ளதாம்.
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கிங்பிஷர் பீர் வகைகள் கொள்முதல் செய்யப்பட இருப்பது சசிகலா கோஷ்டியை அதிர்ச்சியடை வைத்துள்ளதாம். சசிகலா கோஷ்டியை பற்றி கவலைப்படாமல் தமிழக அரசு கொள்முதல் உத்தரவை பிறப்பித்திருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்துக்கு சசிகலாவின் மிடாஸ், பாலாஜி, எம்பீ டிஸ்டில்லரீஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிராந்தி, ரம், பீர் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வருகின்றன. திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் இரு கட்சிகளின் மதுபான ஆலைகளில் இருந்தும் கொள்முதல் செய்வது வழக்கமான ஒன்று.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனமாக டாஸ்மாக் இருந்தபோதும் கொள்முதல் உள்ளிட்டவற்றை கவனித்து வந்தது சசிகலா கோஷ்டிதானாம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக ஜாஸ் சினிமாஸை இளவரசி மகன் விவேக் ரூ1,000 கோடி வாங்கியதில் பெரும் சர்ச்சை வெடித்த நேரம்.
சத்தியம் தியேட்டர்
அப்போது சத்தியம் திரையரங்கையும் வாங்க முயற்சித்தது சசிகலா கோஷ்டி. ஆனால் சத்தியம் திரையரங்க உரிமையாளர் இதனை ஏற்க மறுத்துவிட்டார்.
பாலாஜி டிஸ்டில்லரீஸ்
இதனால் சத்தியம் திரையரங்க உரிமையாளரின் உறவினரான பாலாஜி டிஸ்டில்லரீஸ் உரிமையாளருக்கு நெருக்கடி கொடுத்தது சசிகலா கோஷ்டி. ஆனால் பாலாஜி டிஸ்டில்லரீஸ் உரிமையாளர் இந்த நெருக்கடிக்கு பணியவில்லை.
கொள்முதல் நிறுத்தம்
இதையடுத்து டாஸ்மாக் நிறுவனமானது பாலாஜி டிஸ்டில்லரீஸின் கிங்பிஷர் பீர், எம்.சி.வகை பிராந்தி, விஸ்கிகளை கொள்முதல் செய்வதை அடியோடு ரத்து செய்தது. இதனால் பாலாஜி டிஸ்டில்லரீஸ் நிறுவனம் மூடும் நிலைக்கே தள்ளப்பட்டது.
பலன் தராத பஞ்சாயத்து
இது தொடர்பாக முந்தைய ஆளுநர் ரோசய்யா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடமும் பஞ்சாயத்து போனது. ஆனால் இந்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.
வென்றது லாபி
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் உரிய லாபிகளில் களமிறங்கியது பாலாஜி டிஸ்டில்லரீஸ் நிறுவனம். இதில் தற்போது வெற்றியும் பெற்றுவிட்டது. இதற்காகவே அண்மையில் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு பாலாஜி டிஸ்டில்லரீஸிடம் கொள்முதல் செய்யவும் 'மேலிட'ம் உத்தரவிட்டதாம்.
மிடாஸ் சசிகலா ஷாக்
சசிகலா தரப்பு கோபப்படும் என கவலைப்படாமலேயே வேறுவழியில்லாமல் இந்த உத்தரவுக்குப் பணிந்துள்ளது தமிழக அரசு. தற்போது பாலாஜி டிஸ்டில்லரீஸ் நிறுவனம் திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப் போகிறார்கள் என்கிற செய்தியால் 'மிடாஸ்' சசிகலா தரப்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாம்.