ஜெ. பிரச்சார கூட்டத்தால் நெல்லை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
நெல்லை: நெல்லையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியினர் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்ததால் மது விற்பனை நேற்று மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்தது.
சட்டசபை தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று நெல்லையில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கட்சியினர்
பாளையங்கோட்டையில் உள்ள பெல்பின்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்திற்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கட்சி தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.

டாஸ்மாக்
ஜெயலலிதாவின் கூட்டம் முடிந்ததும் தொண்டர்கள் நேராக அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படை எடுத்தனர். டாஸ்மாக் கடைகளில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியதால் நேற்று மது விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தது.

பார்
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதால் பார்களில் அமர்ந்து குடிக்க இடம் இல்லை. இதனால் பலர் கடைகளுக்கு முன்பு நின்று மது அருந்தினர். அந்த வழியாக சென்ற பெண்கள், குழந்தைகள் மது அருந்துபவர்களை பார்த்து பயந்து கொண்டே சென்றனர்.

கட்சி கொடி
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு அதிமுக கட்சி கொடி பறந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கரை வேட்டி கட்டியவர்கள் கூட்டம் கூட்டமாக மது அருந்தியதை காண முடிந்தது. மூக்கு முட்ட குடித்துவிட்டு கட்சியினர் போதையில் வாகனங்களில் ஏறிச் சென்றனர்.

மகிழ்ச்சி
அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தால் டாஸ்மாக் கடைகளில் ரூ.2.5 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 226 டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications