ஐ.டி.ஊழியர் உமாமகேஸ்வரி கொலை: 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட்
சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில், ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர் உமா மகேஸ்வரி, 23. சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். இந்நிலையில், அதே ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டு எடுக்கப்பட்டது.
கேளம்பாக்கம் போலீசார் இந்த வழக்கை சரிவர விசாரிக்காததால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் அருகே ஒரு கடையில், உமாமகேஸ்வரியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தியதில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல்,23, ராம் மண்டல், 23 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உமாமகேஸ்வரியின் செல்போன், கிரெடிட் கார்டு ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிப்ரவரி 13ம் தேதி சிறுசேரியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உமாமகேஸ்வரி பணம் எடுத்துவிட்டு வெளியில் வந்தார். அப்போது, தங்கள் ஊரை சேர்ந்த உஜ்ஜல் மண்டல் என்பவருடன் சேர்ந்து, உமாமகேஸ்வரியை ஒதுக்குபுறமாக இழுத்து சென்று, 3 பேரும் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி, 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, போலீசார் இந்த வழக்கில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்றால் வழக்குகளை அறிவியல் பூர்வமாக விசாரிக்கவேண்டும். இந்த வழக்கில், உமாமகேஸ்வரி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு ஆகஸ்ட் 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம், கொலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரியின் புகைப்படம், அவரது உடலை அழுகிய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை காட்டி, இவர் யார் என்று தெரியுமா? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு 3 பேரும் தங்களுக்கு யாரென்றே தெரியாது என்று பதிலளித்தனர்.
பின்னர் உமாமகேஸ்வரியின் செல்போன் குறித்து சில கேள்விகளை கேட்டனர். அதற்கும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் பதிலளித்தனர்.
குற்றவாளிகள் 3 பேருக்கும் இந்தி மட்டுமே தெரியும் என்பதால், இந்தி தெரிந்த உயர்நீதிமன்ற ஊழியர், வக்கீல் ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாக செயல்பட்டனர்.
இவர்கள், நீதிபதிகள் கேட்கும் கேள்விகளை இந்தியில் மொழிபெயர்த்து கூறி, அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை நீதிபதிகளிடம் கூறினார்கள். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தீர்ப்பளித்த நீதிபதிகள், உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மூன்று குற்றவாளிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். உயிரிழந்த உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சத்தை 4 மாதத்தில் தர வேண்டும் என்றும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தனர்.