சேலம் மாணவி நிர்வாணம் – அதிமுக நிர்வாகிக்கு ஆதரவாக போலீஸ்: மக்கள் உரிமை இயக்கம் கண்டனம்
சேலம்: பள்ளி மாணவியையும், அவரது தாயாரையும் நிர்வாணப்படுத்தி தாக்கிய அதிமுகவினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க தலைவரும், அதிமுக கிளை செயலாளருமான விஸ்வநாதன் மகன் சந்தோஷ் சாமிநாதன் சேலத்தில் உள்ள மகேந்திரா தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

சந்தோஷ் சுமதியை ஒருதலையாக காதலித்துதுள்ளார். சுமதி பள்ளிக்கு சென்று வரும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு பல தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு சுமதி தனது தாயுடன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்த போது, சந்தோஷ் வீட்டுக்குள் புகுந்து தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன், தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டி தகராறு செய்து தாக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சந்தோஷின் தந்தை தமது உறவினர்களுடன் சென்று மாணவியை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மனம் உடைந்த சுமதியும் அவரது தாயார் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அத்துடன் மாணவியையும், தாயாரையும் தாக்கி நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் விஸ்வநாதனுக்கு போலீசார் சாதகமாக செயல்படுவதாக தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சுமதி குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் நிவாரண உதவி வழங்கவும் அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications