"மேம் ப்ளீஸ் தயவு செய்து போங்க"! போராட்ட களத்தில் செவிலியர்களால் திருப்பி அனுப்பப்பட்ட பாமக திலகபாமா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பாமக நிர்வாகி திலகபாமாவை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையின்படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஹைகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பணிநிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 18ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில் குமாருடன் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் போலீஸார் அனுமதித்த நேரத்தையும் தாண்டிய உண்ணாவிரத போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களை கைது செய்த போலீஸார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். இரவு நேரத்திலும் போராட்டத்தை செவிலியர்கள் தொடர்ந்தனர். இதனால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் மாலையில் விடுவிக்கப்பட்ட செவிலியர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
செவிலியர்கள் போராட்டம் 5ஆவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் அவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அமைச்சரின் கோரிக்கையை சில சங்கத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
அப்போது அமைச்சர் மா.சு. கூறுகையில் நிரந்தர பணியாளர்களை போல, தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அரசாணை வெளியிடப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகள் பணி செய்த பின், செவிலியர் துறையில் காலி பணியிடம் உருவானால், பணி நிரந்தரம் என, சொல்லப்பட்டு, பணி நியமனம் நடந்துள்ளது. எனினும், 7,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கொரோனா காலத்தில் பணியாற்றிய, 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில், நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதிகளில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பாமக நிர்வாகி திலகபாமா சென்றிருந்தார்.
அப்போது போராட்டக்காரர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அறிக்கை மூலம் ஆதரவு தெரிவித்தால் போதும். போராட்டக் களத்தில் பங்கேற்க வேண்டாம் என கூறி திலகபாமாவை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications