பழனி முருகன் கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!
பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி மலைக் கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் பொது தரிசன வழியிலேயே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தைப்பூச திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும். தை மாதத்தில் பவுர்ணமி அன்று வரும் பூச நட்சத்திரத்தைத்தான் தைப்பூசம் என கொண்டாடி வருகிறார்கள்.
இந்த விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

நாளை தைப்பூசத்தையொட்டி திருத்தோரோட்டமும் நடைபெறும். முருகனை தரிசித்து அருள் பெற நாள்தோறும் பக்தர்கள் பழனியில் குவிந்து வருகிறார்கள். அது போல் பழனிக்கு பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினமே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிமலை அடிவாரத்தில் குவிந்துவிட்டனர். இவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்குச் செல்ல வின்ச், ரோப் கார் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மேலே மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மங்கம்மாள் மண்டபம் வழியாக கீழே இறங்கி வரவும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடிவாரம், கிரிவல வீதி பகுதிகளில் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்து வந்து ஆடிப்பாடி மலைக் கோயில் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தைப்பூசத்தையொட்டி சாதாரண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று (பிப் 10), நாளை (பிப் 11), நாளை மறுநாள் (பிப்.12) ஆகிய 3 தேதிகளில் பக்தர்கள் பொது தரிசன பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
சண்முகநதி, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச குடிநீரும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச திருவிழாவுக்கு வரும் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications