தைப்பூசம்: வடபழனி, திருத்தணி முருகன் ஆலயங்களில் கோலாகலம்
சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி, வடபழனி உள்ளிட்ட முருகன் கோவில்களில், நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, காவடி சுமந்தும், நேர்த்திக் கடன் செலுத்தியும், முருகப்பெருமானை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், தங்கத்தேர் மற்றும் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் வீதியுலா வந்தார்.

வடபழனியில் கோலகலம்
சென்னை வடபழனி, முருகன் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு, முருகப்பெருமானுக்கு, பால், பழம், பன்னீர், இளநீர் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.

பால்குடம் சுமந்த பக்தர்கள்
பிற்பகல் 12:30 மணிக்கு, நாகாத்தம்மன் கோவிலில் இருந்து, 2000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம், பன்னீர் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடியுடன், ஊர்வலமாக, வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பாலால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

முருகன் வீதி உலா
புஷ்ப அங்கி அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இரவு 7:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், வள்ளி தெய்வானையுடன், முருகப்பெருமான் திருவீதி உலா நடந்தது.

அலகுகுத்தி நேர்த்திக்கடன்
ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்காக ஏராளமான பெண்கள் நாக்கில் வேல் குத்திக்கொண்டு முருகனை வழிபட்டனர்.

குழந்தையுடன் பூக்குழி
தைபூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கையில் வேலினை சுமந்தும், காவடியை ஏந்தியவாறும் பூக்குழி இறங்கினர். பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒரு பக்தர் பூக்குழி இறங்கியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

குன்றத்தூர் முருகன்
பாரி முனை கந்தகோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவா - விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று தைசப்பூச திருவிழா நடந்தது.

தெப்பத்திருவிழா
மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா கோலகலமாக நடைபெற்றது. கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மலேசியாவில் தைப்பூசம்
இந்துக்களின் முக்கிய திருவிழாவான தைப்பூசம், உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. முருகன் கோவில்களில் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். மலேசியாவில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

125 ஆண்டு தைப்பூச விழா
பத்து மலை குகையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு, 272 படிகள் ஏறிச் சென்று பக்தர்கள் வழிபட்டனர். காவடிகள் ஏந்தியும், முதுகில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். 125 ஆண்டு காலமாக, தைப்பூச திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவதாக, மலேசிய தமிழர்கள் தெரிவித்தனர். இதேபோல பினாங்கு நகரில் உள்ள தண்ணீர் மலை முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.

சிங்கப்பூரில் வழிபாடு
மலேசியா மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இதனால், அங்குள்ள முக்கிய நகர வீதிகள், விழாக்கோலம் பூண்டன. இதேபோல சிட்னியில் உள்ள முருகன் ஆலயத்திலும் தைப்பூச திருவிழா கோலகலமாக நடைபெற்றது.












Click it and Unblock the Notifications