இரு அணிகள் இணைய பேச்சுவார்த்தைக்கு தயார்... ஓபிஎஸ் அறிவிப்பு - தம்பிதுரை வரவேற்பு
எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னை: ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும். அதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இதனால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்டது. கட்சியும் முடக்கப்பட்டது.
கட்சி, சின்னம், ஆட்சியைக் காப்பாற்ற இரு அணிகளும் இணையவேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான இரு அணியின் முக்கிய தலைவர்களும் பேசி வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.
|
ஓபிஎஸ் அறிவிப்பு
இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். இதே கருத்தை விமான நிலையத்திலும் தெரிவித்தார்.

தம்பித்துரை வரவேற்பு
இந்த கருத்தை லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை வரவேற்றுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும். அதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை.

பேச்சுவார்த்தைக்கு தயார்
பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியினர் தாமாக முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். கருத்து வேறுபாடுகளை சரி செய்து ஆட்சியை தக்கவைப்பதே குறிக்கோள் என்று கூறினார். அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.

பிளவு ஏற்படவில்லை
நாங்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தற்காலிகமாகத்தான். நிரந்தரமாக அல்ல என்றும் தங்கள் கட்சியில் ஒருபோதும் பிளவு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications