மக்களை கட்சிகளிடம் அடமானம் வைக்கவா இந்த கருத்துக் கணிப்பு?- தங்கர் பச்சான்
சென்னை: மக்களை கட்சிகளிடம் அடமானம் வைக்கவா கருத்துக் கணிப்பு நடத்துகிறீர்கள் என நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு கேள்வி எழுப்பினார் இயக்குநர் தங்கர் பச்சான்.
நியூஸ் 7 தொலைக்காட்சியும் தினமலர் பத்திரிகையும் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டன. இந்தக் கணிப்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கூறுகையில், "அரசியல் கட்சிகள் என்னும் பெயரில் பொறுக்கித் தின்பவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஓட்டுகளுக்கு அலையும் கூட்டம் ஒருபக்கம், மக்களின் உண்மை மனநிலையை வெளிப்படுத்தாமல் அவர்களிடமிருந்து பொறுக்கித் தின்பதற்காக சில தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கருத்துக் கணிப்புகள் எனும் பெயரில் நடத்தும் நாடகங்கள் ஒருபுறம் என இதுமட்டும்தான் தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களின் நிலை போல் கவலையும், துயரமும் தரக்கூடியது வேறொன்றுமில்லை," என்றார்.
மேலும் அவரை தங்கள் கருத்துக் கணிப்பு குறித்த நேரலை விவாதத்துக்கு நியூஸ் 7 தொலைக்காட்சி அழைத்திருந்தது.
அங்கும் தனது கருத்தை தயங்காமல் முன்வைத்தார் தங்கர் பச்சான்.
விவாதத்தில் அவர் எழுப்பிய கேள்வி:
"இப்போது இந்த கருத்துக்கணிப்புக்கான அவசியம் என்ன? யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டீர்கள்? யாரிடம் நீங்கள் கேள்வி கேட்டீர்கள்? திரும்பத் திரும்ப பரம்பரை கட்சிகளிடம் மக்களை அடகு வைப்பதுதான் உங்கள் நோக்கமா? மாற்று அரசியல் சக்திகள் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கு இல்லையா? மீண்டும் மீண்டும் மக்களை அரசியல் கட்சிகளிடம் அடகு வைக்கத்தான் இந்த மாதிரி கருத்துக் கணிப்பை நடத்தினீர்களா?"
தங்கர் பச்சான் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்த நிகழ்ச்சி நடத்துனர், "சினிமாவுக்கு டீசர், ட்ரைலர் விடுவது போலத்தான் இந்த கருத்துக் கணிப்பும்" என்று சொல்லி வைத்தார்.
"அப்படீன்னா, ஒரு சினிமாவும் தேர்தலும் ஒன்றா.. உங்கள் பார்வையில் தேர்தல் என்பது ஒரு சினிமா மாதிரியா?" என்று தங்கர் பச்சான் மீண்டும் கேட்க, நடத்துநர் விழித்தார்.