ஆட்சி விரைவில் கவிழும்.. முதல்வர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் பேட்டி!
விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும், திமுக ஆட்சிக்கு வரும் என்று கட்சராயன் ஏரியை பார்வையிட்ட ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடக்கும் 'அதிமுக ஆட்சி கவிழும், ஆட்சி மாற்றம் ஏற்படும் ' என்று தெரிவித்தார்.
கட்சராயன் ஏரியை சேலம் மேற்கு மாவட்ட திமுகவினர் தூர்வாரி சீர்படுத்தியுள்ளனர்.ஏரியில் இருந்த முட்புதர்களை அகற்றி திமுகவினர் தூர்வாரியுள்ளனர்.
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் உள்ள ஏரியை, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தூர் வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்படி விடலாம் என்று சேலம் அதிமுக சார்பில் எதிர்ப்பு எழுந்தது.
இதை கண்டித்து அப்போது தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் கட்சராயன் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, திமுகவினர் சீரமைத்த ஏரியை ஸ்டாலின் பார்க்க அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினை கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து கட்சராயன் ஏரியை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், " தமிழகத்தில் ஏரி,குளங்களை, தூர்வார திமுகவினருக்கு நான் வேண்டுகோள் விடுத்தேன். பொதுமக்களின் ஒத்துழைப்போடு திமுகவினர் ஏரி,குளங்களை, தமிழகம் முழுக்க தூர் வாரியுள்ளனர்.
அப்படி தூர் வாரப்பட்ட பல குளங்களில் மழைநீர் நிரம்பி வருகிறது. இன்னும் நிறைய ஏரிகளை திமுகவினர் தூர் வருவார்கள். நடக்கும் ஆட்சி கவிழும், திமுக ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார்.