36 மணிநேரமாக தேடுதல்....3 விமானிகளும் பாதுகாப்பாக இருப்பார்கள்– கடலோர காவல்படை ஐ.ஜி எஸ்.பி.சர்மா
சென்னை: ஆம்லா ஆபரேஷன் கண்காணிப்புக்குச் சென்று மாயமாகியுள்ள சிறிய ரக விமானத்தில் உள்ள 3 விமானிகளும் கண்டிப்பாக பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி எஸ்.பி.சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் சி.ஜி.791 ரக விமானம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. நேற்று முன்தினம் இரவு அதாவது 8ம் தேதி 9.20 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கிழக்கு திசையில் பறந்து கொண்டிருந்ததாக திருச்சியில் உள்ள ரேடார் கருவியில் கடைசியாக பதிவாகியுள்ளது.
விமானம் மாயமான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக தரை வழியாகவும், கடல் வழியாகவும் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. முழு வீச்சில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விமானத்தில் பயணித்த 3 பேரும் சிறப்பாக பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். கிட்டதட்ட 35 மணி நேரம் ஆகியும் விபத்துக்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை.
அதனால், 3 பேரும் பாதுகாப்பாக விமானத்தை தரை இறக்கியிருக்கலாம் என்று கருதுகிறோம். விமானிகளின் குடும்பத்தாரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அந்த விமானத்தை கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவாறு சர்மா தெரிவித்துள்ளார்.