நடிகர் சங்க தேர்தல் விவகாரமே எனது நீக்கத்துக்கு காரணம்: எர்ணாவூர் நாராயணன் பேட்டி
சென்னை: நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் எனக்கும் சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இந்த விவகாரமே எனது நீக்கத்துக்கு காரணம் என்று சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் சங்க தேர்தலே தனது நீக்கத்து காரணம் என்றார். நடிகர் சங்கத் தேர்தலில், ஆளும் அதிமுக சரத்குமாருக்கு சாதகமாக செயல்படவில்லை. இதையடுத்து சரத்குமார் தன்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தியதாக நாராயணன் கூறினார்.
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியடைந்ததால் என்னை பதவி விலகச் சொன்னார். அதற்கு மறுப்பு தெரிவித்ததாலே தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சமத்துவ கட்சியைச் சேர்ந்த பாதிக்கும் அதிகமானோர் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார் நாராயணன்.
அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்ட எர்ணாவூர் நாராயணன், வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்றார்.
மேலும், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் சரத்குமார் திமுகவுடன் கூட்டணிக்கு முயன்று வருவதாகவும் திமுக தரப்பில் இருந்து 3 தொகுதிகளில் கொடுக்க இருப்பதாகவும் நாராயணன் கூறினார்.
நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், அக்கட்சியைச் சேர்ந்த எர்ணாவூர் நாராயணன் திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.