ஆன்மிக பூமி பலாத்கார பூமியாகிவிட்டது.. காம மிருகங்கள் குழந்தைகளை கூட விடுவதில்லை.. நீதிபதி வேதனை
ஆன்மிக பூமி பலாத்கார பூமியாகிவிட்டது என ஹைகோர்ட் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்மிக பூமி பலாத்கார பூமியாகிவிட்டது என ஹைகோர்ட் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரையில் 60 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி அதிருப்தி
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரித்தார். அப்போது வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்காததற்கு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்தார்.

நீதிபதி எச்சரிக்கை
அடுத்த விசாரணையின் போது, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால், மத்திய உள்துறை மற்றும் மாநில உள்துறை செயலாளர்களும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் என எச்சரித்தார்.

இந்தியா தரம் தாழ்ந்துவிட்டது
மேலும், சமீப காலமாக அதிகரித்து வரும் பலாத்கார குற்றச் சம்பவங்களை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஆன்மீக பூமி என்று அழைக்கப்பட்ட இந்தியா, தற்போது பலாத்கார பூமி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என வேதனை தெரிவித்தார்.

குழந்தைகளை கூட விடுவதில்லை
இந்த காம மிருகங்கள், குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்றும், இதற்கு சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட மனிதனின் உளவியல் ரீதியான பிரச்சனையுமே காரணம் என்றார்.

ஆகஸ்ட் 1க்கு ஒத்திவைப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications