பேச்சுவார்த்தை தோல்வி.. வரும் 15ஆம் தேதி ஸ்டிரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
வரும் 15ஆம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை: வரும் 15ஆம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சிஐடியூ உட்பட 10 தொழிற்சங்கள் இதனை கூட்டாக அறிவித்துள்ளன.
சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்ராஜன் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை தர ரூ.750 கோடி போதாது என தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மற்ற துறைகளை விட குறைவாக உள்ளது என்று கூறிய அவர், போக்குவரத்து துறைக்கு நாள்தோறும் ரூ.5 கோடி இழப்பு ஏற்படுவதாக சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
அரசு அளிக்கும் பல கட்டண சலுகைகளால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டு வரும் இழப்பை பல ஆண்டுகளாக அரசு ஈடு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க அரசு தான் காரணம் என்றும், ரூ.7,000 கோடியை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.